முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி 8-ம் தேதி உரையாடுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி 8-ம் தேதி உரையாற்றவுள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார். காட்சி ஊடக பிரதிநிதிகள், பத்திரிகை ஆசிரியர்கள், ரேடியோ ஜாக்கிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் அவர் காணொலிக் காட்சியில் உரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சியில் உரையாற்றவுள்ளார். வரும் 8-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த உரையாடலில் நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை பிரதமர் மோடி கோருவார் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து