முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் மத்திய அமைச்சர் ஜவடேகர் கண்டனம்

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித் திருந்த கர்ப்பிணி பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப் பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானை தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றுத்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்ற நிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. அந்த யானையைக் காப்பாற்ற வனத்துறையினர் இரு கும்கி யானைகள் மூலம் முயன்றும் பலனளிக்கவில்லை. அந்த பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரி்க்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என பல பிரபலங்களும் யானை கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,  மண்ணார்காடு வனச்சரகத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் மலப்புரத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டதை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கவனித்துள்ளது. இந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கேரளாவில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். யானைக்கு உணவில் பட்டாசு வைத்து வெடித்து கொல்வது போன்று செய்வது இந்திய கலாச்சாரம் இல்லை என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து