முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நெய்வேலியில் உள்ள அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையம்-2ல், அலகு-5ல் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று நேற்று (1.7.2020) காலை திடீரென வெடித்த விபத்தில், ஆறு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.  கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். எனது உத்தரவின் பேரில்,  தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விபத்தில் பதினேழு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து