முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர்களை இறைவனுக்கு நிகராக நான் கருதுகின்றேன் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நான் இறைவனுக்கு நிகராக கருதுகின்றேன் என்று மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

உயிர்காக்கும் மருத்துவர்களின் கடமையை பாராட்டி அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்த நாளான ஜூலை மாதம் முதல் நாள் மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவாமல் காத்திட இந்நாளில்  நாடு முழுவதும் அயராது பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.   

மருத்துவர்களின் பணியினை நாடே போற்றிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நான் இறைவனுக்கு நிகராக கருதுகின்றேன். நேரம் காலம் பார்க்காமல்,  தன்னலம் கருதாமல், ஓய்வின்றி உழைக்கக் கூடியவர்கள் நம்முடைய மருத்துவர்கள். இந்த பேரிடர் நோய்த் தொற்று காலத்தில், கடமை தவறாமல் கண்ணியத்துடனும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை. 

மருத்துவர்களின் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் அரசு மகத்தான பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு எப்போதுமே துணை நிற்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் வாழ்வு சிறக்கட்டும் என இத்தருணத்தில் வாழ்த்துவதோடு, இந்த நன்னாளில் மருத்துவர்களை நாம் நினைவு கூர்ந்து வாழ்த்தி, அவர்களுடைய பணி  மென்மேலும் சிறக்க எனது  வாழ்த்துகளை அன்போடு  தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து