முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை இலவச அரிசி வழங்கப்படும் : கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கவும் முதல்வர் எடப்பாடி உத்தரவு

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 31.7.2020 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே இவ்வாண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டதைப் போலவே, இம்மாதமும் (ஜூலை 2020) குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு ஆணையிடுவதற்கு முன்பு, அதாவது 1.7.2020 முதல் 3.7.2020 வரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களான துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் அதற்கான விலை கொடுத்து பெற்றுள்ளனர்.  அவ்வாறு பெற்றுக் கொண்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, அந்த தொகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும். 

துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலையில் ஈடுசெய்து கொள்ளப்படும்.  இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்பேசியில் இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்.  மேலும், இதற்குரிய பதிவுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் மேற்கொள்ளப்படும்.  மேற்கண்ட குடும்ப அட்டைதாரர்கள், இம்மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலைக் கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக் கொள்ளலாம்.

அதே போல், நவம்பர் மாதம் வரை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு,  நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் 2020  வரை விலையின்றி அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் காமராஜ் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து