முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவு

புதன்கிழமை, 8 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 

பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கட்டுமானங்கள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஜெயலலிதா நினைவு மண்டபம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளன. துபாயில் இருந்து வந்திருந்த கட்டிடக்கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி பீனிக்ஸ் பறவையின் ஒரு இறக்கை அமைக்கப்பட்டு உள்ளது.

மற்றொரு இறக்கைக்கு ஓரிரு நாட்களில் கான்கிரீட் போடப்பட உள்ளது. வடநாட்டு பணியாளர்கள் சென்றுவிட்டதால் தற்போது இந்தப்பணியில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தற்போது வரை 95 சதவீதமான பணிகள் நிறைவடைந்து உள்ளன. 2 மாதத்தில் அதாவது செப்டம்பரில் பணியை நிறைவு செய்து நினைவிடத்தை அரசிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து