முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் கல்லூரிகள் கல்வி கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி: தமிழக அரசு முடிவு

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிப்பதற்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து  மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணையின்போது, தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்றும், அதே சமயம் பெற்றோர் விருப்பப்பட்டால் பள்ளி கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என்றும் அரசு தெரிவித்தது. இதையடுத்து, தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கல்விக் கட்டணம் தொடர்பான திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உயர் கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறி உள்ளது. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் திறப்பு பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து