முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்ற அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை பெற்ற அதிமுகவே 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். 

சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட அயனாவரத்தில்   கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

இதன்பின்னர் நிருபர்களுக்கு அவர்  அளித்த பேட்டியில்  கூறியிருப்பதாவது: மக்கள் நலனுக்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை நேரில் சென்று ஆய்வு நடத்தி வருவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார்.

ஆனால் காணொலி காட்சி மூலம் திமுக பொதுக்குழு நடத்தி சாதனை என பெருமை பேசுகிறார். இதே நடவடிக்கையை அரசு செய்தால் திமுக விமர்சனம் செய்கிறது?  மாணவர்களுக்கு அரியர் தேர்விலிருந்து விலக்கு அளித்தோம்.

ஆனால் மாணவர்களுக்கு குழப்பும் ஏற்படுத்தும் செயல் என மாறி மாறி பேசுகின்றனர். மாணவர்கள் நலன் கருதி அரியர் மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவித்தார் முதலமைச்சர். ஆனால் அதையும் திமுக விமர்சிக்கிறது. 

இந்தியாவிலேயே அதிகமாக காணொளி காட்சி மூலம் திட்டங்களை திறந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். மக்களை திசை திருப்பும் வேலைகளை திமுக செய்கிறது.

அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் அதிக சிகிச்சை கட்டணம் வசூலித்தால் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நம்பிக்கையை பெற்ற முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். 

 2021ம் ஆண்டில் அதிமுக ஆட்சி தொடரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். டீக்கடை மளிகைகடை, மார்கெட்களில் அதிமுக ஆட்சி தொடரவேண்டும் என மக்கள் பேசிகொள்கிறார்கள். சட்டசபை தேர்தல் என்பது 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பரிட்சை. அதற்காக நாங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம்.

மக்கள் மனதை, தேவையை படிக்கின்றோம். சேவை செய்கின்றோம். எனவே படித்த மாணவர்களுக்கு தேர்வு பயம் கிடையாது.  எங்களுக்கு அம்மா  நன்றாக சொல்லிக் கொடுத்துள்ளார். கிஷான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்ப்பட்டு வருகின்றனர். 

எட்டு மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என ஸ்டாலின் பேசிய வசனம் மக்களிடம் வெற்றி பெறாது. அதிமுக ஹட்ரிக் சாதனை படைக்கும். திமுகவினர் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

அதிமுக தான்  மக்களிடையே நம்பிக்கையை பெற்றுள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் ஐ.ஏ.எஸ். ஆதிகாரி அரவிந்தன் மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சிவில் எம்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து