முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராலிமலையில் ஐ.டி.சி. தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

இந்த ஆண்டு புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.  உலகையே அச்சுறுத்தும் கொரோனா காலத்திலும் 40 ஆயிரத்து 718 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நேற்று ரூ.351 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஐ.டி.சி. லிமிடெட் தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையினை தொடங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் விரும்பும் மாநிலமாகவும், தொழில்மயமான மாநிலங்களில் முன்னணி மாநிலமாகவும் நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது. வெற்றிகரமான இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாகவும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாகவும் அம்மாவின் அரசு அந்நிய முதலீடுகளை கணிசமான அளவில் ஈர்த்திருக்கிறது.  உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலையிலும், 40,718 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, அதன்மூலம் 74,212 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன்மூலம் 2020–ம் ஆண்டில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு -2015ன் போது, ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் விராலிமலையில், உணவு பொருட்கள் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 1,077 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கையெழுத்திட்டது.  அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக, இதுவரையில் சுமார் 820 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு 2,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

மேலும், ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம், 351 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், மறு பொட்டலமிடுதல் மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகளுக்காக தனது இரண்டாம் கட்ட திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை துவக்கி உள்ளது.  

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய இந்த பகுதியில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் இத்திட்டத்தினைத் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொழில் திட்டங்களை செம்மையாக உலகதரத்தில் செயல்படுத்தி வருகின்ற ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  இதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் பல்வேறு சமுதாய மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஐ.டி.சி. நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐ.டி.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் மேலும் அதிக முதலீடுகளை செய்திட முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஐ.டி.சி. நிறுவனம் தனது வெற்றிப் பயணத்தினைத் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், டாக்டர் சி. விஜயபாஸ்கர், இரா.காமராஜ், ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து