முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் துரித நடவடிக்கையால் மக்கள் 100 சதவீதம் பாதுகாக்கப்பட்டனர்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துரித நடவடிக்கையால் ‘நிவர்’ புயலை சிறப்பாக கையாண்டு உயிர் தேசம் எதுவும் ஏற்படாத வகையில் வரலாற்று சாதனை படைத்து 100 சதவீதம் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனனர் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிகத் தீவிர ‘நிவர்’ புயலானது இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி அளவில் புதுச்சேரிக்கு அருகாமையில் கரையை கடந்து அதற்கு பிறகு படிப்படியாக வேகம் குறைந்துள்ளது.

நிவர் புயலால் பாதிப்புக்குளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மீட்புப் படையின் 15 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். காலை நிலவரப்படி 15 மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பகுதிகளில் வசித்து வந்த 92,132 ஆண்கள், 93,380 பெண்கள் மற்றும் 39,886 குழந்தைகள் உட்பட மொத்தம் 2,25,398 நபர்கள் 3042 தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு தேவையானஉணவு, சுகாதாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 880 நிரந்தர மருத்துவ முகாம்களும், 244 நடமாடும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு, அதில் 73,941 பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும் 5000 நிவாரண முகாம்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

140 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பலமாக காற்று வீசிய போதும் உயிர் தேசம் எதுவும் ஏற்படாத வகையில் ஒருவரலாற்று சாதனையை இயற்கையை கையாண்டு புதிய அத்தியாயத்தை, புதிய இலக்கணத்தை நமது முதல்வர் படைத்து காட்டியுள்ளார். புயல் உருவாவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிய போதும் 100 சதவீதம் மக்கள் பாதிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துரித நடவடிக்கையின் காரணமாகவே பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கியோ, சுவர், மின்னல் இடி தாக்கியோ எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் திருவல்லிக்கேணியில் மரம் விழந்து ஒரு உயிரிழப்பும், திருவள்ளூரில் மண் சுவர் சரிந்து விழுந்தது என இருசம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இயற்கையை அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக முதல்வர் கையாண்ட விதம் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். நிவர் புயலால் குடிசை வீடுகள் 85, ஒட்டு வீடு 12 என மொத்தம் 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக. ஆடு,மாடு என 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக இதுவரை தகவல் கிடைத்துள்ளது. பயிர் காப்பீட்டு தொக

அதே போன்று கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த பணிகள் முடிந்தவுடன் பயிர் சேதத்திற்கான இழப்பீட்டு தொகை மற்றும் பயிர் காப்பீட்டு தொகையையும் வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.

காலை நிலவரப்படி 380 மரங்கள் விழந்து அந்த மரங்கள் 1 மணிநேரத்தில் அகற்றப்பட்டு விட்டது. நிவர் புயலால் பெய்த கனமழை பெய்ததின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள நிலையில், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ராட்சத பம்புகள் கொண்டு வரப்பட்டு சாலை, வீடுகளில் புகுந்துள்ள மழை நீரை போர்கால அடிப்படையில் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு அந்த பணிகளும் அவசர கால அடிப்படையில் நடைபெற்று மழை நீர் அகற்றப்பட்டன.

கஜா, ஓக்கி, வர்தா, தானே புயல் ஆகியவை கடந்த காலங்களில் நமக்கு தந்த அனுபவத்தினை கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் வழங்கியதன் அடிப்படையில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக நிவர் புயலை பத்திரமாக எந்த சேதமும் ஏற்டாத வண்ணம் அனுப்பி வைத்துள்ளோம்.

நிவர் புயல் உருவதற்கு 10 நாட்களுக்கு முன்பே அரசின் அறிவிப்புகளை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டது. அந்த அரசின் உத்தரவுகளை மக்கள் 100 சதவீதம் பின்பற்றியதன் காரணமாக நிவர் புயலை பாதுகாப்பாக நாம் கடந்து உள்ளோம். இதற்கு அனைத்து துறைகளின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு, ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதே போன்று நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டகளில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியண், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் மற்றும் வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் இரவு பகல் உறங்காமல் மக்கள் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதே போன்று வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் நமக்கு மழை பொழிவு என்பது இருக்கும். அந்த வகையில் எதிர்வரக்கூடிய காலங்களில் புதிதாக உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வுநிலைகளை தொடர்ந்து கண்காணிக்க தேவையான கட்டமைப்புகளை முதல்வர் உருவாக்கி தந்துள்ளார். ஆகவே 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.

சென்னையை பொறுத்தவரை 4133 பாதிக்கபடக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்கனவே நான் பலமுறை தெரிவித்துள்ளேன். தமிழக முதல்வரும் அறிவுரையின் படி உள்ளாட்சிதுறை அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது மழைநீர் தேங்கும் பகுதிகள் 100க்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. நான் முழுபூசணிக்காயை சோற்றில்மறைக்க விரும்பவில்லை. தொடர் மழை பெய்யும் போது மழை நீர் தேங்கி மழை விட்ட பின்னர் 1 மணிநேரத்திற்குள் சென்று விடக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் புயல் உருவானதால் அது கடந்த சென்ற பிறகு தான் மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முதல் செம்பரபாக்கம் ஏரியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர், எதிர்கட்சி தலைவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றார். ஆனால் அவர் செல்லும் போது மழை நீர் வடிந்து சாலைகள் நடந்து சென்ற காட்சிகளையே நாம் பார்க்க முடிந்தது. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று ஆறுதல் கூறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது மழைநீர் எங்கு தேங்கியிருக்கிறது என்பதை தேடி அலைய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறுஅவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து