முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது எந்த வழக்கும் போட முடியாது: சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 26 மார்ச் 2021      அரசியல்
Image Unavailable

எல்லா துறைகளிலும் அ.தி.மு.க. அரசு சாதனைகளை படைத்துள்ளது. அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது எந்த வழக்கும் போட முடியாது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஊழல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.  அந்த ஆட்சியில் இருந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிவகங்கையில் நடந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பேசினார். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரத்தால் எனக்கு தொண்டை கட்டிவிட்டது. அதனால் சரியாக பேச முடியவில்லை. இருப்பினும் முடிந்த அளவு பேசுகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு தனது பேச்சை தொடர்ந்த முதல்வர் எடப்பாடி மேலும் பேசியதாவது, 

அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாது. உலகிலேயே பொய் பேசுபவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும்.  அவர் எங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூற நான் தயாராக இருக்கிறேன். அவர் தயார்தானா? இதே திருப்பத்தூரில் மேடை அமைத்து விவாதிக்க தயாராக உள்ளேன். இரு தரப்பையும் கேட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும். மக்கள் தான் நீதிபதிகள். மக்கள் இறுதி தீர்ப்பு கூறட்டும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள். மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருநாளும் பலிக்காது.

நான் விவசாயம் செய்வதால் விவசாயி என கூறி வருகிறேன். ஆனால் இது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை பற்றி கொச்சைப்படுத்தி பேசுகிறார். அவதூறாக பேசுகிறார். நான் விவசாயி என்பதில் உனக்கு என்ன கஷ்டம்? ஏன் கோபம் வருகிறது? அ.தி.மு.க. அமைத்திருப்பது வெற்றி கூட்டணி. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் வந்து விடும். யாரும் வியாபாரம் செய்ய முடியாது. ஓட்டையும் போட்டு அடியும் வாங்கணுமா? இது தேவையா நமக்கு? ஆட்சி அதிகாரம் இல்லாத போதே தி.மு.க.வினர் அட்டூழியம் செய்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா?

அம்மா வழியிலான அரசு சட்டம்-ஒழுங்கை பேணி காத்து வருகிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை சீராக வைத்திருப்பதில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்த நிலை தொடர வருகிற சட்டமன்ற தேர்தல் மூலம் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக உங்களது வாக்குகளை அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

எல்லா துறைகளிலும் அ.தி.மு.க. அரசு சாதனைகளை படைத்துள்ளது. அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது எந்த வழக்கும் போட முடியாது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஊழல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.  அந்த ஆட்சியில் இருந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் வாய்தா வாங்கி வருகின்றனர்.  ஊழல் செய்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டுமா? ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. ஊழல் என்றால் தி.மு.க., தி.மு.க. என்றால் ஊழல்.  எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. தற்போது தி.மு.க.வில் வாரிசு அரசியலாக உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு தி.மு.க. பெருந்தலைவர்கள் தலையாட்டிக் கொண்டிருக்கின்றனர்.  இந்த நிலைகள் மாற வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து