முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. – காங். பொய் பிரச்சாரத்திற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: குமரியில் முதல்வர் எடப்பாடி பிரச்சாரம்

சனிக்கிழமை, 27 மார்ச் 2021      அரசியல்
Image Unavailable

தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் பொய் தான் அரசியல் மூலதனம். அந்த பொய்யை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கடவுள், இயற்கை எங்கள் பக்கம். மக்களும் எங்கள் பக்கம். எனவே தி.மு.க. – காங்கிரஸ் பொய் பிரச்சாரத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார். கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் 100 சதவீதம் வராது என்றும் முதல்வர் கூறினார். விவேகானந்தர் – திருவள்ளுவர் சிலைக்கு நடுவே ரூ.20 கோடியில் புதிய பாலம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–

அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியின் வெற்றி வேட்பாளர்கள் உங்களிடையே வாக்கு சேகரித்து வந்து கொண்டு இருக்கிறார்கள். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். அவர் ஏற்கனவே இந்த தொகுதியிலே வெற்றி பெற்றவர், அவர் அமைச்சராக இருந்த போது பல்வேறு திட்டங்களை இந்தப் பகுதிக்கு செய்தவர். மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் என். தளவாய் சுந்தரத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அவர் அமைச்சராக இருந்து பணியாற்றியவர். அவர் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர், திறமையானவர். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தாருங்கள்.

மாவட்ட செயலாளர் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டி. ஜான் தங்கத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் நமது கூட்டணியின் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் இந்த மாவட்டத்தில் நிறைய பணிகள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இன்றைக்கு மத்தியிலும் நமது பிரதிநிதிகள் கிடையாது, மாநிலத்திலும் நமது பிரதிநிதிகள் கிடையாது. அதனால் இந்த மாவட்ட மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவர முடியவில்லை. ஆகவே இந்த முறை தளவாய் சுந்தரம் மற்றும் ஜான் தங்கம் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளை அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபியுங்கள்.

சரக்கு பெட்டக துறைமுகம் வராது

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு தவறான செய்தியை மக்களிடம் பரப்பி வருகிறார். இந்த தேர்தலில் இதை ஒரு ஆயுதமாக வைத்துக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வரவே வராது. 100 சதவிகிதம் வராது. தி.மு.க.வும் காங்கிரசும் பொய்யை அரசியல் மூலதனமாக வைத்து, மக்களின் மனதை குழப்பி வாக்குகளை பெற முயற்சிக்கிறார்கள். இதுதான் அவர்களது நோக்கம். பொதுமக்கள் அவர்கள் கூறும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கு அரசியல் மூலதனமே தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் பொய் தான். பொய்யை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள்.

இது விவசாயிகள் நிறைந்த பகுதி. நானும் ஒரு விவசாயி. நானும் விவசாயம் தான் செய்து கொண்டு இருக்கிறேன். விவசாயிகள் படும் துன்பங்களை களைவதற்காக பல்வேறு திட்டங்களை அம்மாவுடைய அரசு செயல்படுத்தி வருகிறது. என்றைக்கும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து இயற்கையே நம் பக்கம் இருக்கிறது. கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து 50 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து அணைகள், ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பி இருக்கின்றன. இதனால் விவசாயிகள், தொழிலாளிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆகவே இன்றையதினம் கடவுளும் நம் பக்கம், இயற்கையும் நம் பக்கம், மக்களும் நம் பக்கம். அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. ஆகவே தி.மு.க. – காங்கிரசின் பொய் அவதூறு செய்திக்கு தகுந்த பாடங்களை மக்கள் புகட்ட வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து