முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக முதல்வர் எடப்பாடி ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் முகாம் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் நேற்று 2-வது முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வைரஸ் தொற்றின் பரவல் பல மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது. 

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேர்தல் முடிந்த உடன் தீவிரப்படுத்தியது. சட்டமன்ற தேர்தல் 6-ம் தேதி முடிவடைந்த நிலையில் கடந்த 8-ம் தேதியன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி கடந்த 10-ம் தேதி முதல் ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே  பங்கு பெற வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கொரோனா பரவல் வேகம் அதிகரித்ததால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் அமல்படுத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதைதொடர்ந்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நிபுணர் குழுவினருடன் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 2 முறை ஆலோசனை நடத்தினார்.  அப்போது மருத்துவ குழுவினர் பல்வேறு புதிய பரிந்துரைகளை வழங்கினர். குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வர அவர்கள் கேட்டுக் கொண்டனர்.  இதையடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 4 நாட்களாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

இந்தநிலையில் சேலத்தில் இருந்து சென்னை வந்த முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று  2-வது முறையாக ஆலோசனை மேற்கொண்டார். காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆனால் உடனடியாக எந்த அறிவிப்புகளையும் அவர் வெளியிடவில்லை.  கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. தினசரி பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்து வருவதால், அதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றி அதிகாரிகளிடம் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். 

அப்போது அதிகாரிகள் தரப்பில் மேலும் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து