முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மனுக்கு விமர்சையாக நடந்த பட்டாபிஷேகம்: நாளை திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான நேற்று (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி மீனாட்சி-சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்தனர். 

கொரோனா பரவல் 2-வது அலை காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, உள்திருவிழாவாக நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்தனர்.  மீனாட்சி பட்டாபிஷேகம் இரவு 8.05 மணிக்கு மேல் 8.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் நடந்தது.  அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோல் வழங்கி, பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது.  அதன் பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக பூப்பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதியை வலம் வந்தார். இந்த பட்டாபிஷேக விழாவை காண பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை. நேற்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று, சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு மீனாட்சி அழைக்கும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 24-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து