முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜனை வழங்கக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்வர் எடப்பாடி கடிதம்: ஆக்சிஜனை பி்ற மாநிலங்களுக்கு திருப்பி விடுவது நியாயமல்ல

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜனை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடுவது நியாயமல்ல என்றும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. அதிகளவு ஆக்சிஜன் தேவையான கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும், மாநிலத்தின் வளர்ந்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவைகள் குறித்து உங்கள் அன்பான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றைக் குறைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 400 மெட்ரிக் டன் என்று இருக்கும் நிலையில் விரைவில் 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை வரலாம்.  2020-ம் ஆண்டில் முந்தைய கொரோனா பரவலின் போது அதிகபட்சமாக 58,000 ஆக இருந்த தொற்று எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தற்போது தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இது மேலே குறிப்பிட்டபடி ஆக்சிஜன் தேவையை அதிகரித்துள்ளது. தடையற்ற மற்றும் போதுமான ஆக்சிஜன் விநியோகத்தை வழங்க அனைத்து முயற்சிகளும் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதற்கிடையில், தமிழகத்திற்கான சமீபத்திய தேசிய மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்ட ஒதுக்கீட்டில் 220 மெட்ரிக் டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த நிர்ணயத்தின் அடிப்படையில், 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புத்தூரில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையிலிருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 

இது தமிழகத்தில் தற்போதுள்ள ஆக்சிஜன் நுகர்வு உற்பத்தி திறனை விட குறைவாக உள்ளது என்ற தவறான நிலைப்பாட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த பிரச்சினையில், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) தரவுப்படி, தமிழ்நாட்டில் ஏற்கனவே மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 220 மெட்ரிக் டன் மட்டுமே என்கிற அளவைத் தாண்டி ஆக்சிஜன் நுகர்வு 310 மெட்ரிக் டன் என்கிற அளவை எட்டியுள்ளது. மேலும், ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் எங்களை விட குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தொற்று எண்ணிக்கை உள்ளன. 

மேலும் பெரிய எஃகு தொழிற்சாலைகள் அந்தந்த மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு அருகில் உள்ளன. ஆனால், தென்னிந்தியாவில் இரண்டாவது பெரிய அளவிலான தொற்று பாதிப்புகளுடன் உள்ள சென்னை நகரத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சப்ளை செய்யப்படவில்லை.  இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். தமிழகம் இதுவரை ஆக்சிஜன் செல்வதை தடுக்க எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை,

மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தேவைக்கு உதவ எப்போதும் தயாராக இருந்தாலும், தமிழகத்தின் தேவை மிக அதிகமாக இருக்கும் போது ஆக்சிஜனை கட்டாயமாக மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவது தேவை இருக்கும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து 80 கிலோ லிட்டர் ஆக்சிஜனை (கிலோ லிட்டர் (1 கே.எல்) ஆயிரம் லிட்டருக்கு (1000 லி) சமம்) மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து