முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரவாயலில் அம்மா உணவகத்தை சூறையாடிய தி.மு.க.வினர் நீக்கம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      தமிழகம்
Image Unavailable

மதுரவாயலில் அம்மா உணவகத்தைச் சூறையாடி பெயர்ப் பலகையை அகற்றிய தி.மு.க.வினர் குறித்த தகவல் வெளியானதை அடுத்து அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், கட்சியிலிருந்து நீக்கியும் உத்தரவிட்டுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம் பெருகும் எனப் பிரச்சாரம் செய்தார். இது சமூக வலைதள காலம். சிறிய தவறு செய்தாலும் யாராவது ஒருவர் அவரது செல்போனில் வீடியோ எடுத்து போட்டால் விஷயம் காட்டுத் தீயாகப் பரவி விடும். இதை அனைவரும் அறிந்திருந்தாலும் குழு மனப்பான்மையில் வன்முறையைக் கையிலெடுப்பவர்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கட்சித் தலைமைக்கும் கெட்ட பெயர் வருகிறது.

இன்று முகப்பேர் பகுதியில் தி.மு.க. சார்பில் நடந்த வெற்றி அறிவிப்புக் கூட்டத்தில் திடீரென தி.மு.க.வினர் சிலர் அருகில் இருந்த அம்மா உணவகத்தில் புகுந்து சூறையாடினர். பெயர்ப் பலகையை உடைத்தும், கிழித்தும் எறிந்தனர். இதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதற்குக் கண்டனமும் எழுந்தது.

இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து உடனடியாக தி.மு.க. தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக தி.மு.க.வினர் அங்கு பெயர்த்த பெயர்ப் பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு, பகுதிச் செயலாளர் தலைமையில் அந்தப் பணி நடைபெற்றது.  இதுகுறித்து பேட்டி அளித்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

அம்மா உணவகம் பெயர்ப் பலகைகளைப் பிரித்தெடுத்து அம்மா உணவகத்தில் பிரச்சினை செய்த விவகாரம் தி.மு.க. தலைவர் கவனத்திற்குச் சென்றது. தவறான செயலில் ஈடுபட்ட சுரேந்திரன், தவசுந்தர் ஆகிய இருவரும் தி.மு.க.வில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்கள். அவர்கள் சுவரில் இருந்து பெயர்த்தெடுத்த பெயர்ப் பலகையை அதே இடத்தில் ஒட்டச் சொன்னோம். அதேபோல் சட்ட நடவடிக்கை எடுக்க தலைவர் உத்தரவிட்டதன் அடிப்படையில் இருவர் மீதும் தி.மு.க. சார்பில் பகுதிச் செயலாளர் நொளம்பூர் ராஜன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது 294 (பி), 427, 448 ஆகிய ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் கட்சிப் பொறுப்புகளில் இல்லாவிட்டாலும் கட்சியிலிருந்து நீக்க தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிலையில் ஒரு சிலர், தி.மு.க.வினர் வன்முறையைத் தொடங்கி விட்டார்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுவே ஆட்சிக்கு வரும்முன் தலைவர் எவ்வகையில் செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது.  இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து