முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று உள்ளவர்கள் பேசினாலே நோய் பரவுகிறது: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வியாழக்கிழமை, 27 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிய பின் அல்லது இருமிய பின் அவரது எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால் அதை சுவாசிப்பவர்களும் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிய பின் அல்லது இருமிய பின் அவரது எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால் அதை சுவாசிப்பவர்களும் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் அல்லது பேசும் போதும் அவரிடம் இருந்து வெளிப்படும் எச்சிலின் பெரிய துகள்கள் 2 மீட்டர் தூரத்துக்குள் கீழே விழுந்து விடும். ஆனால் ஏரோசோல் எனப்படும் எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும். இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும்.

காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டு விட்டு தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் வைரசால் பாதிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மூடப்பட்ட இடங்கள், காற்று வசதி இல்லாத இடங்கள் போன்ற இடங்களில் இந்த ஏரோசோல்கள் விழுந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும். 

எனவே வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கிருமிநாசினிகளை பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.  முக்கியமாக நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் இருப்பது நல்லது. ஏனென்றால் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  எனவே வீடுகளில் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து