முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐ.பி.எல். தொடரின் 31 ஆட்டங்கள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கிறது: ராஜூவ் சுக்லா பேட்டி

சனிக்கிழமை, 29 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒத்திவைக்கப்பட்ட 31 ஆட்டங்கள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பி.சி.சி.ஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

காணொலி மூலம்...

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா தொற்று 

இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4-ம் தேதி இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

அதிகாரபூர்வ தேதி 

தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம்  தேதிக்குள் நடத்தி முடித்து விடலாம் என்று திட்டமிட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் அதிகாரபூர்வ தேதி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்து வீரர்கள்...

ஐ.பி.எல். மீண்டும் தொடங்கும் போது அதில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கும் நிலையில் இங்கிலாந்து உள்பட வெளிநாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கும் விஷயத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன.

டி-20 உலகக்கோப்பை...

7-வது டி-20 உலக கோப்பை போட்டியை இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பு அதற்கு வழிவிடுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. வருகிற 1-ம்  தேதி நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் டி-20 உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட இருக்கிறது. 

இந்தியாவின் நிலைப்பாடு...

டி-20 உலக கோப்பை விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடாக என்ன தெரிவிக்கலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டன. கொரோனா பரவலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை ஜூலை மாதம் வரை பொறுத்திருந்து பார்த்து அதற்கு தகுந்தபடி முடிவு எடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கும் என்றே தெரிகிறது. 

அமீரகத்தில் நடக்கும்...

இந்த நிலையில், கூட்டத்திற்கு பிறகு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பி.சி.சி.ஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, ஐ.பி.எல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து