முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முதல் தவணை நிவாரண நிதி ரூ 2 ஆயிரத்தை பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 31 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா முதல் தவணை நிவாரண நிதி ரூ 2 ஆயிரத்தை பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்  என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை உடைத்து பரவலை உடனடியாக தடுக்கும் பொருட்டு 07.06.2021 முடிய அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆணையிடப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது. 

இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழலை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் அரிசி குடும்ப அட்டைகள் பெற தகுதியுடையவை என தணிக்கை மூலம் தீர்மானிக்கப்பட்டு குடும்ப அட்டைகள் விநியோகிக்க நடைமுறையில் இருந்த குடும்பங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 2 கோடியே 9 லட்சத்து 81,900 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 15.05.2021 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.2000/- வீதம் விநியோகம் செலுத்தப்பட்டு வருகிறது. 31.05.2021 முடிய இவற்றில் 98.4 சதவீதம் குடும்பங்கள் நிவாரண உதவித் தொகை பெற்றுச் சென்றுள்ளனர்.

மீதமுள்ள குடும்பங்களில் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற காரணத்தினாலும் முகவரி மாற்றம் செய்து போக்குவரத்து வசதியின்மை காரணமாக நியாயவிலைக் கடைக்கு செல்ல இயலாத நிலையிலும் சில குடும்பங்கள் நிவாரண உதவித் தொகைபெற இயலவில்லை என அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் அவர்களுக்கான நிவாரண உதவித்தொகை பெறும் வகையில் அத்தொகையினை 2021 ஜூன் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அட்டைதாரர்கள் உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் முகக்கவசம் மற்றும் சமுக இடைவெளியினை பின்பற்றியும் தங்களையும் சமூகத்தையும் நோய்தொற்று

அபாயத்திலிருந்து காத்துக் கொள்ளவும் நோய் தொற்று சங்கிலியினை உடைத்திடவும் உதவும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து