முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமத கட்டணத்தில் இருந்து விலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய நடைமுறையின்படி, இறப்பு நிகழ்வு நடந்து 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு / இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ.100 ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ.200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500 ஆகவும் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த காலதாமத கட்டணம், பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்து வருவதாகவும், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

 இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை அறிவோம்.  நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத நேர்வுகளில் இறப்புகள் நிகழ்ந்து விடுகின்றன.  

துயரமான இந்த சம்பவத்தில், சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம், 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ன்படி, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்த காலக்கட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ.100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ.200/- ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500/- ஆகவும் உள்ளது. 

 பெருந்தொற்றினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கவும், அந்தக் காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 1-1-2020 முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.  காலதாமத கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசே ஈடுசெய்யும்.  இருப்பினும், உரிய காலத்தில் பிறப்பு / இறப்பினைப் பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து