முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலில் எடுத்து விசாரிக்கவேண்டி இருப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு: தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, ஜூன் 9-ந்தேதி (நேற்று) வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் நேற்று அந்த மனு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மணிகண்டன் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் திருமணமானவர் என தெரிந்துதான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தி உள்ளார். மணிகண்டன் தன்னைக் காயப்படுத்தியதாக சாந்தினி கூறியிருப்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளார். இடைக்கால பாதுகாப்பாக அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று வாதாடினார்.

மேலும், ‘போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நடிகை சாந்தினி அறிமுகம் ஆன 3 மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டுள்ளது. கருவுக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க வேண்டும். மனுதாரர் உதைத்ததாக புகாரில் கூறப்படவில்லை. மனுதாரர் திருமணம் ஆகாதவர் என்று நடிகையிடம் கூறவில்லை. அது அவருக்குத் தெரியும். அதனால் நம்பவைத்து ஏமாற்றியதாக கூறமுடியாது. மனுதாரர் எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. நடிகையுடன் அவர் வசித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என அவர் வாதிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், ‘2017-ம் ஆண்டு பரணி என்பவர் மூலம் மணிகண்டனுக்கு நடிகை சாந்தினி அறிமுகமாகி உள்ளார். திருமணம் செய்துகொள்வதாக கூறி சாந்தினியை மணிகண்டன் ஏமாற்றியுள்ளார். கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். அவர் உதைத்ததால் நடிகை சாந்தினி படுகாயம் அடைந்துள்ளார். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. மணிகண்டன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நடிகை சாந்தினி மற்றும் அவருக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் டாக்டர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முக்கிய சாட்சிகளையும் விசாரிக்க வேண்டியுள்ளது. மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால் சாட்சிகளை கலைக்கக்கூடும். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது' என்று வாதாடினார்.

நடிகை சாந்தினி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மணிகண்டன் திருமணம் செய்துகொள்வதாக நம்பிக்கை ஏற்படுத்தியதால் சாந்தினி உறவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறும்பட்சத்தில், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருதக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. முதலில் சாந்தினி யார் என தெரியாது என்று கூறியவர், பிறகு சந்தித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது' என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து