முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் ஏற்பு - இன்று முதல் டீக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி: பார்சல் மட்டும் வாங்கி செல்லலாம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி இன்று முதல் டீக்கடைகளை திறக்க  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பார்சல் மட்டுமே வாங்கி செல்லலாம். கடைகளில் நின்று குடிக்க அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் இ- சேவை மையங்களுக்கும் இன்று முதல் அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  31-5-2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. 

தேநீர்க் கடைகளுக்கு அனுமதி

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 இன்று முதல் தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல் முறையில்  தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை.  

இனிப்பு கடைகளுக்கும் அனுமதி

மேலும் பேக்கரிகள் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.  இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம்.  இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. 

இ-சேவை மையங்களுக்கு அனுமதி

பொது மக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.  

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே டாஸ்மாக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து டீ கடைகளையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் டீ கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். ஆனால், பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து