முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே வெடித்துச் சிதறிய கார் : 70 வீடுகள் சேதம்

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சாத்தான்குளம் : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த குமரன்விளை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45).

இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரையில் அரசு அனுமதியுடன் வாணவெடிகள் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். திருமண வீடு, கோவில் திருவிழா மற்றும் விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு வெடிகளை சப்ளை செய்வார்.

நேற்று சாத்தான்குளம் பகுதியில் உள்ள 2 விசே‌ஷ வீடுகளுக்கு வாணவெடிகள் சப்ளை செய்வதற்காக தனது காரில் ஏராளமான வாணவெடிகளை அடுக்கி வைத்திருந்தார். இரவில் அந்த காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென்று அந்த கார் தீப்பிடித்தது. அப்போது காரில் இருந்த வெடிகள் வெடித்து சிதறியது. காரில் ஏராளமான வெடிகள் இருந்ததால் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 30 நிமிடம் பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்தன.

அப்போது வாணவெடிகள் காரில் இருந்து சீறிப்பாய்ந்து அருகில் உள்ள வீடுகள் மீதும் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ள பல வீடுகளின் ஓடுகள், கண்ணாடிகள், சுவர்கள், ஜன்னல்கள் சேதமடைந்தன.

மொத்தம் 70 வீடுகள் வரை சேதமடைந்ததாக கூறப்படுகிறது. வெடிகள் வெடித்த சத்தம் பெரிய குண்டு வெடிப்பு போல் நிகழ்ந்தது. அந்த பகுதியில் உள்ள வீடுகளும் நில அதிர்வுகள் ஏற்பட்டது போல அதிர்ந்தன.

இதனால் வீடுகளில் உள்ள பொதுமக்கள் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு வாணவெடிகள் வெடித்த விபரம் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு திசையன்விளை தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வீடுகளில் தீப்பிடிக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தீப்பிடித்து எரிந்த காரையும் அணைத்தனர். இதில் அந்த கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது.

பயங்கர வெடி விபத்து பற்றி தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி.கண்ணன் ஆகியோரும் நேற்று காலை நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த வெடிவிபத்தில் அந்த பகுதியை சேர்ந்த 3 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு பெரிய காயங்களோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யாரேனும் வேண்டும் என்றே காரில் தீ வைத்தார்களா அல்லது அதிக வெப்பம் காரணமாக கார் தீப்பிடித்து எரிந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

வாணவெடிகள் தயாரித்த உரிமையாளரான பாலகிருஷ்ணனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து