முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 

தமிழ்நாட்டில் இதுவரை, 12-09-21, 19-09-21, 26-09-21 மற்றும் 03-10-21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நான்கு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 87லட்சத்து 80ஆயிரத்து 262 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று தமிழ்நாட்டில் 5-வது மாபெரும் தடுப்பூசி முகாம்கள் மொத்தம் 32,017 மையங்களில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 1600 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி, மடுவன்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளி ஆகிய கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடமும், பணியாளர்களிடமும் உரையாடினார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக முதலாவது மற்றும் இரண்டாவது கோவிட் தடுப்பூசி தவணை பெற்றவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அப்போது  தமிழ்நாட்டில் தற்போது வரை 3கோடியே 74லட்சத்து 20ஆயிரத்து 314 பயனாளிகளுக்கு முதலாவது தவணையாக 65 சதவீதமும் மற்றும் 1கோடியே 29லட்சத்து 38ஆயிரத்து 551 பயனாளிகளுக்கு இரண்டாவது தவணையாக 22 சதவீதமும்  செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை அளிக்க திட்டமிட்டுள்ளதால், அவரவர் இருப்பிடத்தின் அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாலும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார். 

முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிர இயக்கமாக நடத்த அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களின் இலக்கை முழுமையாக அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  

இந்த ஆய்வின்போது, அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.இராதகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து