முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆய்வு: வாக்குப்பெட்டிகளை மாற்றிவிட்டதாக அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருப்பத்தூர் : ஆலங்காயம் வாக்கு எண்ணும் மையத்தை தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளருடன் சென்று பார்வையிட்டதால் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

ஆலங்காயம் ஒன்றியத்தில் பதிவான வாக்குபெட்டிகள் ஆலங்காயம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிரியதர்ஷினியின் கணவர் ஞானவேலுடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார். காவல் துறையினர் அமைத்துள்ள பாதுகாப்பு தடுப்புகளை மீறி உள்ளே சென்ற அவர் வாக்குபெட்டிகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் இருந்த தேவராஜ், பிறகு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இது குறித்து தகவல் வெளியானவுடன் அதிமுகவினர் அங்கு குவிந்தனர். வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோ.வி.சம்பத்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க.எம்.எல்.ஏ. மாவட்ட கவுன்சிலர் வேட்பாளருடன் சென்று வாக்குபெட்டிகளை மாற்றிவிட்டதாக கூறி அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க.எம்.எல்.ஏ. சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலங்காயம் - வாணியம்பாடி சாலையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். அ.தி.மு.க.வினர் சிலர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே காவலர்கள் பயன்படுத்த போடபட்டிருந்த நாற்காலிகள், மேஜைகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்து வெளியேற்றினர்.

இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் 'வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. தவறு நடக்க வாய்ப்பில்லை, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதன் பிறகு என்ன முடிவு எடுக்கலாம் என்பதை யோசிக்கலாம், ஆகவே முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும் படி கேட்டுக்கொண்டார்.

ஆட்சியர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க.வினர், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு, அங்கு பதற்றம் தணிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து