முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு தொடங்கியது : கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று காலை தொடங்கியது.

இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் பேரும், தமிழகத்தில் 30 ஆயிரம் பேரும் இத்தேர்வை எழுதினர். தேர்வு கூடங்களில் மாணவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 712 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 4-ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 27-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலை தொடர்ந்து இந்த தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 73 நகரங்களில் நேற்று காலை தொடங்கியது.

தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு மாணவர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாணவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் இருக்கிறதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் தேர்வு கூடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பேஜர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேர்வு கூடங்களில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் செயிண்ட் மேரீஸ் ஆண்கள் பள்ளி, தி.நகரில் கர்நாடக சங்கம் பள்ளி, திருவல்லிக்கேணி செயிண்ட் தாமஸ் பள்ளி,  ராயப்பேட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி செயிண்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 72 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து