முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 'வருமுன் காப்போம்' திட்டம் தமிழகம் முழுவதும் இன்று 50 இடங்களிலும், சென்னையில் 2 இடங்களிலும் தொடங்கப்படவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

2006ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் கருணாநிதியால் 'வருமுன் காப்போம்' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் மருத்துவப் பயன்பெற்றனர். இந்தியா முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்ட அத்திட்டத்தை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவ வசதியுடன் கடந்த வாரம் சேலத்தில் செப். 29 அன்று தமிழக முதல்வரால் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டு ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அத்திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் 50 இடங்களில் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 4 மணி வரை நடைபெற உள்ளது. சென்னையில் 2 இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நடைபெற உள்ளது. அந்த முகாம்களில் 17 அரங்குகளில் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. மருத்துவத்துறையின் செயல்பாடுகள், விழிப்புணர்வு என்கிற வகையில் 20-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை மற்றும் கோவிட் -19 தடுப்பூசியும் வழங்கப்பட இருக்கிறது. மேல் சிகிச்சைகள் தேவைப்படுவோர் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். முதலமைச்சரின் காப்பீடு திட்டத்துக்கான அட்டைகளும் இம்முகாம்களில் வழங்கப்படவிருக்கின்றன.

மருத்துவக் கல்லூரிகளில் 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்குத்தான் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. தமிழக மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாட்டோம் எனச் சொல்லவில்லை. தடுப்பூசி செலுத்திடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

நோய் எதிர்ப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்குக் கூடுதலான வகையில் தடுப்பூசிகள் அனுப்பி, மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் கூடுதலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, அதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் தமிழகத்துக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருந்து வருகிறார். வாராவாரம் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தடுப்பூசி முகாமில் 5 இடங்களுக்கு நேரடியாகச் சென்றும், அதற்கு முந்தைய வாரம் 3 இடங்களுக்குச் சென்றும், நேற்று முன்தினம் இரண்டு இடங்களுக்கு நேரடியாகச் சென்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்தின் முதல்வரும், வாராவாரம் தடுப்பூசி முகாம்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தின் முதல்வர் மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கமும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், சேற்றுப்புண் இவற்றுக்காகத்தான் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகே நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து