முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து உபரி மின்சாரத்தை மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக எழுந்துள்ள மின் தட்டுப்பாடு பிரச்சனையை சமாளிக்க மாநில அரசுகள், மத்திய அரசின் தொகுப்பில் உள்ள உபரி மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ள எரிசக்தித்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதால் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஒரு சில நாட்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய தொகுப்பில் உள்ள மின்சாரத்தில் 15 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதாக எரிசக்தித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் வாடிக்கையாளர்களுக்கு உரிய மின்சாரம் விநியோகம் செய்யாமல் தட்டுப்பாடு நிலவி வருவதை எரிசக்தித்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மிக அதிக விலைக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனவே மத்திய தொகுப்பில் உள்ள ஒதுக்கீடு செய்யப்படாத மின்சாரத்தை மின்சாரம் தேவைப்படும் மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ள எரிசக்தித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மாநிலங்களில் உபரி மின்சாரங்கள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எரிசக்தித்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் தேவையுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசின் தொகுப்பு மின்சாரத்தை விநியோகம் செய்ய வழி ஏற்படும் என்று எரிசக்தித்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மின்சாரம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது மத்திய அரசின் தொகுப்பு மின்சாரத்தை பயன்படுத்தவில்லை எனில் அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு நிறுத்தப்பட்டு, தேவையுள்ள மாநிலங்களுக்கு மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எரிசக்தித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து