முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூரில் 'வருமுன் காப்போம்' சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொளத்தூர், சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமைத் தமிழகக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலம், கொளத்தூர் பள்ளிச் சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களின் உயிர் காக்கும் திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமைத் நேற்று தொடங்கி வைத்தார்.

ஏழை எளியோருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்திடும் வகையில் முதல்வரால் 29.9.2021 அன்று சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தொடங்கி வைக்கப்பட்டது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்களின் மூலம் பொது மக்களுக்குப் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு மருத்துவர்களால் நோயைக் கண்டறிந்து அதற்கான முதல் சிகிச்சைகளும் அளிக்கப்படும். 

முதல்வரால் நேற்று கொளத்தூர், சென்னை மாநகராட்சிப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்ட வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில், பில்ராத் மருத்துவமனையின் சார்பில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை முறைகள், ஆர்பிஎஸ் மருத்துவமனையின் சார்பில் குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைகள், முருகன் மருத்துவமனையின் சார்பில் நரம்பு மற்றும் எலும்பு சார்ந்த சிகிச்சைகள், போர்டிஸ் மலர் மருத்துவமனையின் சார்பில் இதய சிகிச்சைகள், வாசன் கண் மருத்துவமனையின் சார்பில் கண் பரிசோதனைகள் மற்றும் இலவசக் கண் கண்ணாடி வழங்குதல், சென்னை பல் மருத்துவமனையின் சார்பில் பல் தொடர்பான சிகிச்சைகள், MERF மருத்துவமனையின் மூலம் காது- மூக்கு- தொண்டை குறித்த சிகிச்சைகள், HYCARE மருத்துவமனையின் மூலம் சர்க்கரை மற்றும் சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைகள், சீடிஎச் மருத்துவமனையின் சார்பில் மனநலம் சார்ந்த சிகிச்சைகள், காசநோய் தொடர்பான சிகிச்சைகள், ஆயுஷ் மருத்துவர்கள் மூலம் சித்த மருத்துவ சிகிச்சைகள் ஆகிய சிகிச்சை முறைகள் குறித்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இம்முகாமில் 35 மருத்துவர்கள், 60 செவிலியர்கள், 3 மருந்தாளுநர்கள், 20 மருத்துவ ஊழியர்கள் மற்றும் 4 தொழில்நுட்ப வல்லுநர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இம்முகாம் மூலம் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.  இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து