முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு பிறகே சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு பிறகே சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த ‘சைகோவ்-டி’ என்ற பெயரில் ஊசியின்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை சிறுவர்களுக்கு அவசர காலத்தில் செலுத்துவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியையும் சிறுவர்களுக்கு செலுத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினரும், கொரோனா தடுப்பு பிரிவின் தலைவருமான வி.கே.பால் கூறியதாவது:-

கோவேக்சின் தடுப்பூசி ஏற்கனவே பெரியவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு செலுத்தப்பட வேண்டுமானால் உற்பத்தியையும், வினியோகத்தையும் அதிகரிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்று தற்போது சிறுவர்களை அதிகமாக தாக்குகிறது. அதேசமயத்தில் சிறுவர்களிடம் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. அவர்களிடம் இருந்து பிறருக்கு நோய் தொற்று எளிதாக பரவுகிறது.

சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் போதிய அளவில் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும். மேலும் சைகோவ்-டி தடுப்பூசியை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுமம் ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு பிறகே சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து