முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபடி வீராங்கனைக்கு அரசு வேலை வழங்கக்கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : கபடி விளையாட்டில் நான்கு சர்வதேச தங்கப்பதக்கங்களை வென்ற வீராங்கனைக்கு அரசு வேலை கோரிய வழக்கில் பொதுநலன் இல்லை எனக் கூறி தமிழ்நாடு விளையாட்டு வீரர் சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுநல வழக்கு... 

காமென்வெல்த், ஏசியன் கேம்ஸ் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில், இந்தியாவுக்காக விளையாடி தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்த கவிதா என்ற வீராங்கனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

பணிக்கு வரவில்லை... 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்திய கபடி அணி கேப்டனாக இருந்த கவிதா ஆயுதப்படை பிரிவில் சேர்ந்தார். அவருக்கு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு மறுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பணிக்கு வரவில்லை எனக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் மனுதாரர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழங்கவில்லை... 

தேர்வு மூலம் பெற்ற பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் வறுமையில் வாடுவதால், பிற மாநிலங்களைப் போல அவருக்கு அரசு வேலை வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் சங்கம் தரப்பில் கோரப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை எனக் கூற முடியாது எனவும், தனி நபருக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொது நல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து