முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்மாத இறுதிக்குள் 100 சதவீத முதல் தவணைத் தடுப்பூசி செலுத்த இலக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

நவம்பர் மாத இறுதிக்குள் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் என்ற இலக்கோடு பணியாற்றி வருகிறோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.,

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (24-11-2021) அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேப்பிட்டல் லாண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் சி.எஸ்.ஆர். நி பங்களிப்பில் பி.எஸ்.ஏ., தொழில்நுட்பத்துடன்கூடிய ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்திடும் ஆக்ஸிஜன் ஜெனரேட்டரை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது.,

கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில், தமிழக முதல்வர் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பேரிடருக்கு உதவியாய் அரசுடன் கரம் கோர்க்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளையேற்று ஏராளமான தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தமிழக அரசுடன் இணைந்து மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பேருதவியாய் இருந்தார்கள்.

கேப்பிட்டா லாண்டு’ நிறுவனத்தின் சார்பில் வடசென்னையில் புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடியே 16 லட்சம் செலவில் ஆக்ஸிஜனை உற்பத்திச் செய்யக்கூடிய ஜெனரேட்டரை நிறுவியுள்ளனர். இதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கக்கூடிய 100 நோயாளிகளுக்கும் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு கூடுதல் சிறப்பாக இந்த ஆக்ஸிஜன் ஜெனரேட்டரை நான்கு ஆண்டுகளுக்கு பராமரிப்பிற்கும், கண்காணிப்பதற்குமான பணிகளை கேப்பிட்டல் லாண்டு நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.

நிதிநிலை அறிக்கையில் வயது மூத்தோருக்கான சிறப்பு வார்டுகளை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட வயது மூத்தோரான ஆதரவற்றோரை யாரோ ஒருவர் மருத்துவமனையில் சேர்த்துவிட்ட பிறகு அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள முனையாமல் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அவர்களைப் பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகளின் முதல்வர்கள், மருத்துவமனையின் தலைமை பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுபோல் ஏற்கெனவே தி.மு.க மாநகராட்சி நிர்வாகத்தில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், வயதானவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சிகிச்சை அளித்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் மாத இறுதிக்குள் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் என்ற இலக்கோடு பணியாற்றி வருகிறோம். உலக அளவில் கூட தடுப்பூசி செலுத்துவதில் 85 சதவிகிதத்தில் தான் உள்ளது. ஏனென்றால் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அந்த நாட்டிலேயே இல்லாமல் வேறு நாட்டிற்கு சென்றுவிடுவதால் இவ்வாறு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் முதல்தவணை தடுப்பூசி 76 சதவிகிதத்தினை அடைந்துவிட்டோம். 2வது தவணை தடுப்பூசி 40 சதவிகிதத்தினை அடைந்துள்ளது.

இன்னும் கிராமங்களுக்குச் சென்று வீடுகளில் தடுப்பூசி செலுத்துவதில் ஒரே நாளில் 3.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் இரண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 100 சதவிகிதம் தடுப்பூசியை செலுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், இதனை பயண்படுத்தி கொள்ள வேண்டும்.

முதலமைச்சரால் தனியார் மருத்துவமனைகளில் தனியார் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நி பங்களிப்பில் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இதுவரை பெறப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23 லட்சத்து 83 ஆயிரத்து 340 ஆக உள்ளது.

இதுவரை இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 27 லட்சத்து 19 ஆயிரத்து 707 ஆக உள்ளது. கையிருப்பு என்பது தனியார் மருத்துவமனைகளில் இல்லை. வடநாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாத் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிகழ்வில் ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து