முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதி வரை நீட்டிப்பு : முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு : கேரளாவுக்கும் பொது போக்குவரத்துக்கு அனுமதி

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் வரும் 15.12.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவுக்கும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து அவர் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்த செய்திக்குறிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்  30.11.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.  இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர்மழை பொழிந்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-12-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

ஏற்கனவே ஆந்திரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை போன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

மேலும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள்  கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.  கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.  கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கடண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர,  இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கூட, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.  மக்கள்  அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து