முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தலைமை தேர்தல் நாளை நடைபெறுகிறது : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வேட்பு மனுக்கள் ஏற்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நாளை 7-ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மறுதினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் கடந்த வெள்ளியன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

இதற்கிடையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு கடந்த வெள்ளிக் கிழமையன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர் ஓமபொடி பிரசாத் சிங் அங்கிருந்த தொண்டர்களால் வெளியேற்றப்பட்டார். விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் ஓமபொடி பிரசாத்துக்கு விருப்பமனு தரப்படவில்லை என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 2-வது நாளாக நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

அவர்கள் இருவரும் தங்கள் வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் ஆணையர்களான பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் சமர்ப்பித்தனர்.  நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 154 மனுக்கள் பெறப்பட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்டாலும், வேறு சிலரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களை 15 பேர் முன் மொழியவும், 15 பேர் வழி மொழியவும் செய்து இருக்க வேண்டும். இந்த 30 பேரும் 5 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினர்களாக இருப்பதுடன், எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்களாக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டவிதி கூறுகிறது. எனவே, இவற்றை காரணம் காட்டி, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வேட்புமனுக்களை தவிர பிற மனுக்கள் அனைத்தும் வேட்புமனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

எனவே, வேட்புமனு திரும்ப பெறும் நாளான 6-ம் தேதி (இன்று) மாலையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.  இன்று (டிச. 6) வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து நாளை 7-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து