முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மாஸ்க்' அணியாவிட்டால் இனி 500 ரூபாய் அபராதம்:புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரித்து வருவதை முன்னிட்டு இனி பொது இடங்களில் 'மாஸ்க்' அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் முகக்கவசம் அணியும்போது மூக்கு மற்றும் வாய் முழுமையாக மூடியிருக்கும்படி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் (மாஸ்க்) அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத் தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி, அதற்கான அரசாணையை நேற்று வெளியிட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொடர்ந்து இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்குக் கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் மட்டும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 521 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் தொற்று (நேற்று முன்தினம்) 17,934-ஆக உள்ளது. சென்னையில் 7,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,039 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில், மாநிலம் முழுவதும் 37,953 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 21,735 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9302 ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் மக்கள் வெளியே செல்வது அதிகரிக்கும் என்பதால், வழிபாட்டுதலங்கள் மூடப்பட்டு உள்ளது. ஆனாலும் பொது மக்கள் அதிக அளவில் வெளியே சென்று வருவதால் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இதனிடையே ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கொரோனா தடுப்பு வழிக்காட்டுதல் நெறிமுறைகளை அறிவித்தது. இதன்படி பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.  

கொரோனா நோய்த் தொற்று காற்று மூலம் பரவக் கூடியது என்பதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது செப்டம்பர் 2021-ல் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்ததை விட கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நடைமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் தலா ரூ.200 அபராதம் வசூலித்து வந்தனர். செப்டம்பரில் வெளியான ரூ.200 அபராதம் என்ற விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ''பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிடப்படுகிறது; முகக்கவசம் அணியும்போது மூக்கு மற்றும் வாய் முழுமையாக மூடியிருக்கும்படி இருக்க வேண்டும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசத்தை முழுமையாக அணிய வேண்டும். முகக்கவசத்தை முழுமையாக அணியவில்லை என்றாலும் அபராதம் விதிக்கப்படும். ஒமைக்ரான் வேகமாக பரவும் நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிந்தால், நோய் பரவலின் தீவிர தன்மை குறையும்” என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து