Idhayam Matrimony

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன ஆலை, மற்றும் ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை மற்றும் ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலை ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

ஈரோடு ஒன்றியத்தில் 1982-ம் ஆண்டு நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலை நிறுவப்பட்டு தீவன உற்பத்தி தொடங்கப்பட்டது.  பின்னர், இத்தொழிற்சாலையில் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் தீவன உற்பத்தி திறன் கொண்டதாக உயர்த்தப்பட்டது.

பால் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இத்தீவன ஆலையின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் இயந்திரங்கள் நிறுவி, உற்பத்தி அளவினை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக உயர்த்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயும், ஒன்றிய பங்களிப்பாக ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயும் என மொத்தம் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன்னாக உற்பத்தி திறன் உயர்த்தப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார். இதன்மூலம் 19 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை சார்ந்த 7792 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு கால்நடைத் தீவனம் வழங்க வழிவகை ஏற்படும்.    

கறவையினங்களின் பால் உற்பத்தி, இனப்பெருக்க திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவற்றை அதிகரிக்கப்பதில் தாது உப்புக் கலவை பங்கு மிக முக்கியமானதாகும். தாது உப்புக் கலவையின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ரூ.67.50 லட்சம் மற்றும் ஒன்றிய பங்களிப்பாக  ரூ.67.50 லட்சம், என மொத்தம் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில்  நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட  தாது உப்புக் கலவை தொழிற்சாலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், சா.மு.நாசர், கால்நடை பராமரிப்பு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், பால் உற்பத்தி மேம்பாட்டுத் துறை ஆணையர் கோ.பிரகாஷ், ஆவின் மேலாண்மை இயக்குனர் மருத்துவர் ந.சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து