முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகராட்சி நிர்வாக துறை சார்பில் ரூ. 518.17 கோடியில் 21 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
CM 2022-05-12

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,  நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் ரூ. 518.17 கோடி மதிப்பீட்டிலான 21 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 1-வது குறுக்கு தெருவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ரூ.2.23 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உணர்வுப் பூங்கா,  வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நொளம்பூர், சக்தி நகர் பிரதான சாலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ரூ.1.95 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள  உணர்வுப் பூங்கா,  திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி, குக்ஸ் சாலை சந்திப்பு, கிருஷ்ணதாஸ் சாலையில்  ரூ. 1.11 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா,  

மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் ரவுண்டணா அருகில் உள்ள வி.எஸ். மணி நகர் 3-வது தெருவில் (மேற்கு) ரூ.1.03 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா,  சோளிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட கிண்டி பொறியாளர்கள் குடியிருப்பு 3-வது குறுக்கு தெரு, காரப்பாக்கம், கண்ணகி நகர் காவல் நிலையம் அருகில் ரூ. 1.03 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நொளம்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், முகப்பேர் மேற்கு பிரதான சாலையில் ரூ. 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா,

மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட செம்பியம் - செங்குன்றம் சாலை அருகில் செளமியா நகர், பஜனைகோயில் தெருவில் ரூ. 90 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா,  மணலி மண்டலத்திற்குட்பட்ட மணலியில், புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் குறுக்கே ஆமுல்லவாயலில் ரூ.15.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம்,  மணலி மண்டலத்திற்குட்பட்ட மணலியில், புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் குறுக்கே பர்மா நகரில் ரூ.14.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம்,  அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் கரையில், கஸ்தூரிபாய் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை ரூ.18.71 கோடி செலவில் அடர்வன காடுகள், நடைபாதை, மிதிவண்டி பாதை மற்றும் சுற்றுப்புறத்தை மேம்படுத்தப்பட்ட பணி, 

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டத்தில் மணலி மண்டலத்திற்குட்பட்ட மாத்தூர் பகுதி மக்களுக்காக ரூ.44.90 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்,  பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை பகுதி மக்களுக்காக ரூ. 34.63 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கல் திட்டம், மணலி மண்டலத்திற்குட்பட்ட இடையான்சாவடி, சடையான்குப்பம் மற்றும் கடப்பாக்கம் பகுதி மக்களுக்காக ரூ. 28.21 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்,  

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல்  சீரமைப்பு திட்டத்தின் கீழ், கூவம் ஆற்றின் கரையோரம் – சேத்பட்டில் ரூ. 3.29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 லட்சம் லிட்டர் திறன் கொண்ட தொகுப்பு முறை இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,  சென்னை, ஆலந்தூர் நிலமங்கை நகரில் ரூ.25.52 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் கழிவுநீர் உந்து நிலையம்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில்  ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் - பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகளுடன் கூடிய 547 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ. 224 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம் - மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 5 பேரூராட்சிகள் மற்றும் 318 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ. 85.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாகவும்,

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் நைனாங்குளத்தில் உள்ள உரக்கிடங்கு பகுதியில் ரூ.3.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 30 KLD (Kilo Litre Daily) கொள்ளளவு கொண்ட கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்,  தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி, மத்தளம்பாறை ரோடு உரக்கிடங்கு பகுதியில் ரூ.4.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 40 KLD  கொள்ளளவு கொண்ட கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்,  திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரம் நகராட்சி, காந்திபுரம் பகுதியில் ரூ.4.00 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர் குடியிருப்புகள்,  திருப்பூர் மாவட்டம்,  திருப்பூர் மாநகராட்சி, சந்தை பேட்டை தென்னம் பாளையம் பகுதியில் ரூ. 2.18 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தை என மொத்தம் ரூ. 518.17 கோடி மதிப்பீட்டிலான 21 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், அடையாறு உப்பங்கழி மற்றும் முகத்துவாரத்தின் 358 ஏக்கர் அதன் தொடர்ச்சியாக திரு.வி.க பாலத்திற்கு கிழக்கே அமைந்துள்ள அடையாறு முகத்துவாரப் பகுதியையும் சீரமைப்பதற்கு 100 கோடி ரூபாய்க்கு அரசால் நிருவாக அனுமதி வழங்கப்பட்டு, முதற்கட்டமாக 58 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ள அடையாறு உப்பங்கழியின் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று ‘தொல்காப்பியப் பூங்கா’  சுற்றுச்சூழல் பூங்காவாக உருவாக்கப்பட்டது. தற்போது, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் உருவாக்கி பராமரிக்கப்பட்டு வரும் ‘தொல்காப்பியப் பூங்காவில்’ 3.20 கிலோமீட்டர் நீளத்திற்கு பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கி, அதற்கான அனுமதி அட்டையினை  பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கினார்.

பணி நியமன ஆணை

பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் மற்றும் பேரூராட்சிகளின் ஆணையரகத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 126 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர்  வழங்கினார்.

நிவாரண நிதி

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் காலமான 65 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 6 ஒப்பந்தப்பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 16.55 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக  5 நபர்களுக்கு முதல்வர் நிவாரண நிதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என். நேரு, காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் மற்றும் தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, முதன்மைச் செயலாளர் / சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலர் டாக்டர்.எஸ்.சுவர்ணா, முதன்மைச் செயலாளர் / சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், பேரூராட்சிகளின் ஆணையாளர் டாக்டர்.இரா.செல்வராஜ்,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் பிரதீப் குமார்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து