முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
CM-3 2022 05 13

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல் தவணைத் தொகையாக தலா  இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட இ. முருகேசன் (சட்டப்பார்வையில் ஆவணங்கள்), கு. வாஞ்சிநாதன் (களம் கண்ட தமிழ்), ஆர். இலங்கேஷ்வரன் (விண்ணைத் துளைக்கும் விழுதுகள்), புலவர் முனைவர் பி.சிவலிங்கம் (அறிவுலக மேதை அம்பேத்கர்), பானு ஏழுமலை (அம்பேத்கர் தான் ஆற்றிய உரையும் விவாதங்களும்), ஆ. பிரியாவெல்சி, (ஆத்மம் பழகு அனைத்தும் பழகு), பொ. பொன்மணிதாசன் (பொன்மணிதாசன் கவிதைகள்), கே. சுப்பிரமணி (சிகரங்களுக்கான விலாசங்கள்), யாக்கன் (டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட அவைக்குள் நுழைந்த வரலாறு அதன் பின்னணி அரசியல் சூழ்நிலைகள்), ஆர். காளியப்பன் (ஆநிரை), முனைவர் ந. வெண்ணிலா (பழந்தமிழர் மானிடவியல்) ஆகியோருக்கும், 

2021-2022ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட எஸ்.கே. அந்தோணிபால் (பறையர்கள் ஆட்சியும் வீழ்ச்சியும்), த. மனோகரன் (இந்திய நாட்டின் கவுரவம் டாக்டர் அம்பேத்கர்), புலவர் இர. நாகராஜ் (பைந்தமிழ் பூங்காற்று), கருவூர் கன்னல் (ஓர் ஊரின் கதை), அன்புதீபன் (அவள் தேடிய சொந்தம்), தங்கசெங்கதிர் (எ) த. செந்தில்குமார் (மானுடத் தெறிப்புகள்),  அ.ப.காரல் மார்க்ஸ் சித்தாத்தர் (அம்பேத்கரின் “புத்தரும் அவர் தம்மமும்”), த. கருப்பசாமி (சித்தர் இலக்கியங்கள் காட்டும் ஆன்மீகமும் மருத்துவமும்), முனைவர் ம. தமிழ்ச்செல்வி (நிழல் பருகும் நீர்), முனைவர் ஜெ. மதிவேந்தன் (சங்கம் - ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்) ஆகியோருக்கும் என மொத்தம் 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல் தவணைத் தொகையாக தலா  இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர அமுத பெரு விழாவை முன்னிட்டு, ஒன்றிய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் சார்பில்  ஒடிசா மாநிலம். புவனேஸ்வரில் 23.4.2022 முதல் 29.4.2022 வரை நடைபெற்ற  9-வது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில் தமிழக பழங்குடியினர் சார்பாக உதகை மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் மூலம் 3 தோடர்  இனத்தைச்  சார்ந்த பழங்குடிப் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு விற்பனை முகவர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர்.  அவ்விழாவில் மொத்தம் 62 பழங்குடியினரின் கைவினைப் பொருட்களும் 200 விற்பனை அங்காடிகளும் நிறுவப்பட்டு இருந்தன.  

இவ்விழாவில் உதகை மாவட்டத்தில் வாழும் பண்டைய பழங்குடியினரான தோடர் இன மக்களால் வெள்ளை நிற பருத்தி துணியில் கருப்பு மற்றும் சிவப்பு நிற கம்பளி நூல்களை கொண்டு கைகளால் நெய்யப்படும் பூத்தையல் தேசிய அளவில் முதலிடம் பெற்றது. இதற்கான பரிசு தொகையாக ரூ.5000–மும் பழங்குடியினர் ஆய்வு யைமத்திற்கு கேடயமும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது. 

தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில், தோடர் பழங்குடியினரின் பூத்தையல் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றதற்காக, இவ்விழாவில் கலந்து கொண்ட தோடர் பழங்குடியின பெண்களும், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ச.உதயகுமார்  ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமதி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் எஸ். அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து