முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரனிலை ஏற்க பொதுமக்கள் - எதிர்க்கட்சிகள் மறுப்பு: இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது : அதிபர் பதவி விலகும் வரை போராட்டம் என அறிவிப்பால் மீண்டும் பதற்றம்

சனிக்கிழமை, 14 மே 2022      உலகம்
ranil-2022-05-12

Source: provided

கொழும்பு : இலங்கை புதிய பிரதமராக ரனில் விக்கிரமசிங்கேவை ஏற்க மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அங்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. அதிபர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பாம் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடும் சிரமம்... 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது.

புதிய பிரதமராக...

மக்களின் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவர் மக்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதை விரைவில் உறுதி செய்வேன் என்று அறிவித்துள்ளார். அவருக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. அவருக்கு முழுமையான ஆதரவு கொடுப்பதாக மகிந்த ராஜபக்சேயின் கட்சி அறிவித்து உள்ளது.

எதிர்க்கட்சிகள்...

ரனில் விக்ரமசிங்கே தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க போவதில்லை என்று அனைத்து எதிர்கட்சிகளும் அறிவித்துள்ளன. எனவே மகிந்த ராஜபக்சேவின் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று தெரிகிறது.

மே 17-ம் தேதி...

இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே பெரும்பான்மை பலத்தை நிருபித்துக் காட்ட வேண்டியுள்ளது. வருகிற 17-ந்தேதி இதற்காக பாராளுமன்றத்தில் பலப்பரீட்சை நடக்கிறது. அப்போது ரனிலுக்கு ஆதரவாக ராஜபக்சே கட்சி செயல்படும் என்று தெரிகிறது. ரனில் விக்ரமசிங்கே பிரதமரானதை ஏற்று போராட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதுமக்களும், எதிர்கட்சிகளும் ரனில் விக்ரமசிங்கே பிரதமரானதை ஆதரிக்கவில்லை. இதனால் இலங்கையில் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஊரடங்கு நிறைவு...

போராட்டக்காரர்கள் மீண்டும் அதிபர் கோத்தபய ராஜபக்சே இல்லம் அருகே காலிமுகத்திடலில் ஒன்று திரண்டுள்ளனர். போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்த போவதாகவும் அறிவித்து உள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது. கொழும்பில் பல்வேறு பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இலங்கையில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்தது.

பிரதமர் உத்தரவு...

இதனால் ஏராளமானோர் போராட்ட களத்திற்கு திரும்பினார்கள். அதிபர் மாளிகை முன்பு போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். தலைநகர் கொழும்பில் பல இடங்களில் நேற்று காலை போராட்டம் நடந்தது. கொழும்புமட்டகுளி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். சமையல் கியாஸ் தரக்கோரி போராட்டம் நடந்தது.

ஏற்க மாட்டோம்...

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பல இடங்களில் அரிசி, பெட்ரோல் கேட்டும் போராட்டம் நடந்தது. இதன் காரணமாக இலங்கையில் போராட்டம் மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரனில் விக்ரமசிங்கை ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்து உள்ளனர். அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து