முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சான்று பெறாத 124 மெட்ரிக் டன் நெல் விதைகளை விற்பனை செய்ய தடை : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சனிக்கிழமை, 28 மே 2022      தமிழகம்
mrk-panneerselvam-2022-01-2

Source: provided

சென்னை : சான்று பெறாத 124 மெட்ரிக் டன் நெல்விதைகளை விற்பனை செய்ய தடை  விதித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். 

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு, விவசாயிகளுக்குத் தரமான நெல் விதைகள் விநியோகத்தைத் தீவிரமாகக் கண்காணித்திட சிறப்பு ஆய்வுக் குழு அமைத்து, அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அதில்,  விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்திட இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில், கடந்த  24-ம் தேதி மேட்டூர் அணையினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 19 நாட்கள் முன்னதாகவே, அணை திறக்கப்பட்டுள்ளதால், நடப்பாண்டில், குறுவை நெல் சாகுபடிப் பணியினை டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் துவக்கி உள்ளனர். 

இந்நிலையில், அரசு விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் விதையினை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று விதைச் சான்றுத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி, விவசாயிகளுக்குத் தரமான நெல் விதைகள் கிடைப்பதை உறுதி செய்திட, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களைத் தீவிரமாக ஆய்வு செய்திட, ஆறு சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சிறப்பு ஆய்வுக் குழுக்கள் டெல்டா மாவட்டங்களில் 83  அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும் 189  தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, விதை இருப்பு பதிவேடுகளை முறையாக பராமரிக்கப்படாதது, விதை முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விதை விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விதைச் சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக 62.34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 124 மெட்ரிக்டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும், 240 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளை விரைவில் பெற்று அதற்கேற்ப துறை நடவடிக்கையோ அல்லது சட்டரீதியான நடவடிக்கையோ மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும்,விதை தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால், டெல்டா மாவட்ட விவசாயிகள் விதை ஆய்வு துணை இயக்குநர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.  விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள இவ்வரசு விவசாயிகளுக்குத் தரமான விதை கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து