முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முப்படைகளிலும் ஆண்டுக்கு 45 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க 'அக்னி பத்' திட்டம் விரைவில் அறிமுகம் : மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      இந்தியா
Rajnath 2022 02 22

Source: provided

புதுடெல்லி : இந்திய பாதுகாப்புத் துறையில் புதிய பணி நியமன முறை'அக்னி பத்' திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 45 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதுவிதமான ராணுவ பணி நியமன முறையை டூர் ஆஃப் தி ட்யூட்டி என்று அழைக்கிறார்கள். இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என்றழைக்கப்படுவார்கள்.

புதுமையான முயற்சி:

இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் பணி...

இந்தப் பணிநியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளாது. ஆஃபீஸர் ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். 6 மாத இடைவெளியில் முப்படைகளுக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் இவர்களில் 25% பேர் மட்டும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஆனால் மீண்டும் பணி என்பதை இதுவரை இன்னும் உறுதிபடுத்தவில்லை. இந்த முறை மூலம் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.

தற்போது இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வேலை செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஷார்ட் சர்வீஸ் ரூட் மூலம் வீரர்களை நியமிப்பதால் அரசுக்கு செலவினங்கள் குறையும் எனக் கூறப்படுகிறது.

ஷார்ட் சர்வீஸ் ரூட்...

1) பணிக்கான வயது வரம்பு: 17  – 21 வயது வரை.

2)  பணிக்காலம்: 4 ஆண்டுகள்.

3) காலிப் பணியிடங்கள்: 45,000 to 50,000 (ஆண்டுதோறும்).

4) பயிற்சி காலம்: 6 மாதங்கள்.

5) சம்பளம்: ரூ. 30,000-ரூ. 40,000.

6) பணி ஓய்வு பலன்: ரூ. 10-12 லட்சம் (வரிச்சலுகையுடன்).

ரூ.40 ஆயிரம் வரை...

டூர் ஆஃப் ட்யூட்டி திட்டம் மூலம் நியமிக்கப்படும் பணியாளருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும். இதில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அரசாங்கமும் அதற்கு சமமான தொகையை செலுத்தி அதை சேவா நிதி திட்டத்தின் கீழ் சேமித்து வைக்கும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான தொகை 4 ஆண்டுகள் பணி முடியும் போது வழங்கப்படும்.

இளைஞர்களுக்கு...

இந்தத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றும் அனுபவத்தை பெற விரும்பும் இந்திய இளைஞர்கள் குறுகிய காலம் ராணுவத்தில் பணியாற்றலாம். அவர்கள் விருப்பம்போல் தற்காலிகமாக ராணுவத்தில் சேவை செய்துவிட்டு இயல்புக்கு திரும்பலாம். டூர் ஆஃப் ட்யூட்டி திட்டத்தை ராணுவத்தில் உள்ள வீரர்கள் பற்றாக்குறையை சரி செய்ய கொண்டுவந்துள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது. மேலும் இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றுடெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து