முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ் : 27-ம் தேதிக்குள் பதிலளிக்க துணை சபாநாயகர் உத்தரவு

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      இந்தியா
Uttav-Thackeray 2022-06-21

Source: provided

மும்பை : மகாராஷ்டிரா அரசியலில் உச்ச கட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸை அனுப்பியுள்ளார் துணை சபாநாயகர் நர்ஹரி ஷிர்வால். அதில் வருகிற 27-ம் தேதிக்குள் 16 பேரும் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டணி ஆட்சி... 

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், 40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

144 தடை உத்தரவு...  

மகாராஷ்டிரா அரசியலில் உச்ச கட்ட குழப்பம் நிலவும் நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்களை கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில தலைநகர் மும்பையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும் என்று மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ அங்கீகாரம்...

இதற்கிடையே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டே உருவாக்கியுள்ள புதிய குழுவுக்கு “சிவசேனா பாலாசாஹேப் ”என பெயர் சூட்டப்பட்டு உள்ளது என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தீபக் கேசர்கார் கூறியுள்ளார். சபாநாயகரிடம் இருந்து சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறும் வரை இதுபோன்ற குழுக்களை ஏற்று கொள்ள முடியாது என மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.

துரோகத்தை...

இதற்கிடையே மும்பையில் நேற்று நடைபெற்ற சிவசேனாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, “என் தந்தை பால்தாக்கரேயின் பெயரை வேறு யாரும் பயன்படுத்த முடியாது; வேண்டுமென்றால் உங்கள் தந்தையின் பெயரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். கூட்டத்தில் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, “கிளர்ச்சி எம்எல்ஏக்களின் துரோகத்தை தங்கள் கட்சி மறக்காது. நாங்கள் (சிவசேனா) நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

நிராகரித்தார்...

முன்னதாக மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஷிர்வாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவரது இ-மெயில்லுக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அதிகாரப்பூர்வமற்ற இ-மெயில் இருந்து தீர்மானம் அனுப்பப்பட்டதால், அதை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் தெரிவித்தார். மேலும் எந்த எம்.எல்.ஏ.வும் அதை தனது அலுவலகத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும் அந்த கடிதத்தில் அசல் கையொப்பங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தகுதி நீக்க நோட்டீஸ்... 

இந்நிலையில் கவுகாத்தியில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கியுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஷிர்வால் நேற்று தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் அனைவரும் வருகிற 27ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். அவர்களது பதில் திருப்தியாக இல்லாவிடில் தகுதி நீக்க நடவடிக்கைக்கு அவர்கள் ஆளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் அளிப்போம்... 

ஷிண்டே முகாம் பாலாசாகேப்பின் சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறது. யாரும் கட்சியை விட்டு வெளியேறவில்லை, எங்கள் குழுவிற்கு வேறு பெயரை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு பதில் அளிப்போம் ” என்று சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏ தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து