முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவை விரிவாக்கம்: மகாராஷ்டிராவில் 18 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi 2022 07 29

Source: provided

புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து, மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றனர். அவர்கள், மகா விகாஸ் அகாடி தலைமையிலான கூட்டணியில் இருந்து சிவசேனா விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், உத்தவ் தாக்கரேவின் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது.

இந்த சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இடம் கொடுக்காமல், முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி விலகினார். இதனை அடுத்து, பா.ஜ.க. கூட்டணியுடன் ஏக்நாத் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையுடன் மகாராஷ்டிராத்தில் ஆட்சி அமைத்தனர்.

இதனை தொடர்ந்து, முதல்வராக ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30-ந்தேதி பொறுப்பேற்று கொண்டார். கூட்டணிக்கு ஆதரவு வழங்கிய பா.ஜ.க.வின், முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராத்தின் துணை முதல்வரானார்.

மகாராஷ்டிராத்தில் புதிய அரசு அமைந்தபோதிலும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறாமல் இருந்தது. இதுபற்றி பரவலாக பேசப்பட்ட நிலையில், 5 வாரங்களுக்கு பின்னர் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதில் முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர். அவர்களது பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியானது. இதன்படி பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேர், சிவசேனாவை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அவர்களில் பா.ஜ.க.வை சேர்ந்த மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதீர் முங்கந்திவார், சுரேஷ் காடே, கிரீஷ் மகாஜன், ரவீந்திர சவான், மங்கள் பிரபாத் லோதா, விஜய்குமார் கவித் மற்றும் அதுல் சவே ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோன்று சிவசேனாவை சேர்ந்த தாதா பூசே, ஷம்புராஜே தேசாய், சந்தீபன் பும்ரே, உதய் சமந்த், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல் மற்றும் சஞ்சய் ரதாவுட் ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் 18 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர்தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிராத்தின் புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;- மகாராஷ்டிரா அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த குழு, கலவையான நிர்வாக அனுபவம் மற்றும் நல்லாட்சி வழங்கும். மாநில மக்களுக்கு சேவை செய்யவிருக்கும் அமைச்சரவைக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து