முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: தமிழக வீரர் உள்பட 3 பேர் வீர மரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      இந்தியா
army-----2022-08--11

Source: provided

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது தமிழகத்தை சேர்ந்த வீரர் லஷ்மணன் உள்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிகழ்விற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர மரணமடைந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

கூடுதல் படையினர்... 

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் உள்ள பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ராணுவ முகாம் ஒட்டிய எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயன்றுள்ளனர். அவர்களை நிற்கும்படி கூறி பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். அப்போது வந்திருந்த சிலர் திடீரென படை வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் அதற்கு பதில் தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து தர்ஹால் காவல் நிலைய பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டது.

3 வீரர்கள் பலி...

பின்னர் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவத்தின் பதிலடி தாக்குதலில், ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

2 பேர் காயம்...

இதனை ஜம்மு மண்டலத்திற்கான ஏ.டி.ஜி.பி. முகேஷ் சிங் உறுதிப்படுத்தி உள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில், "பார்கல் ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியைத் தாண்ட சிலர் முயன்றனர். அவர்களை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். முன்னதாக அந்த தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். அதில், மூன்று வீரர்கள் வீர மரணமடைந்தனர். இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

தமிழக வீரர்...

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 3 வீரர்களில் ஒருவர் மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் ரைபிள்மேன் லட்சுமணனும் ஆவார். மேலும் 2 வீரர்கள் சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் உயிரிழந்துள்ளனர். 

ரகசிய தகவல்... 

முன்னதாக புதன் கிழமை ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் மாவட்டம், வோட்டர்ஹோல் பகுதியில் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த இடத்தை பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் சண்டை நீடித்தது.

3 தீவிரவாதிகள்...

இந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் காஷ்மீர் பண்டிட்டுகள் ராகுல் பட், அம்ரின் பட் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். சுட்டு வீழ்த்தப்பட தீவிரவாதிகள் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில், மற்றொரு ரகசிய தகவலின் அடிப்படையில் புல்வாமா மாவட்டத்தில் தகாப் கிராஸிங் என்ற இடத்தில் உள்ள சுற்றுச்சாலைக்கு அருகே தேடுதல் வேட்டை நடத்திய போது சுமார் 30 கிலோ எடையளவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பாதுகாப்பு அதிகரிப்பு....

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினம் விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் இரங்கல்...

இந்நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,  காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த  இராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.  

ரூ. 20 லட்சம் நிதி...

தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய இராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன். வீரமரணமெய்திய தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் இலட்சுமணனின்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து