முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி, மருத்துவ திட்டங்களை இலவசம் என சொல்ல முடியாது: அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே அரசின் நோக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-1 2022-08-13

Source: provided

சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

சென்னை, கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த 2.11.2021 ஆம் நாள் நான் தொடங்கி வைத்தேன்.

B.Com, BBA, BCA, B.Sc., Computer Science ஆகிய நான்கு பாட பிரிவுகளுடன் இந்தக்கல்லூரி தொடங்கப்பட்டது. 3.12.2021 அன்று சைவ சித்தாந்தம் சான்றிதழ் படிப்பிற்கான புதிய வகுப்பு 100 மாணவர்களுடன் தொடங்கி வைக்கப்பட்டது. முதலாமாண்டிலேயே 220 மாணவர்கள் சேர்ந்தார்கள். அவர்கள் அனைவருக்கும்  கட்டணமில்லாமல் முதலாமாண்டு பயில ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தற்போது மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறைவு பெற்று பல்கலைக்கழக தேர்வுகளும் முடிவுற்று, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்.  இந்தக் கல்வியாண்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய நான்கு பாட பிரிவுகள் மட்டுமில்லாமல் புதிதாக B.A.. சைவ சித்தாந்தம் என்ற பாட பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இருக்கக்கூடிய 240 இடங்களுக்கு  1089 விண்ணப்பங்கள் வந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புறேன்.

ஐந்தில் ஒருவருக்கு தான் இடம் தர முடியும் என்ற அளவுக்கு இக்கல்லூரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது. இரண்டாம் ஆண்டுக்  கல்வியை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு புதிதாக சேரவிருக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளும் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கட்டணமில்லை என்று சொல்வதன் மூலமாக இதனை யாரும் நீங்கள் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. கல்வியானது அனைவருக்கும் எளிய முறையில் கிடைத்தது, அனைவரும் முன்னேறியாக வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்தோடு மாணவ சமுதாயத்தின் மீது இருக்கக் கூடிய உண்மையான அக்கறையின் காரணமாக, அதுவும் உண்மையான அக்கறையின் காரணமாக, இந்த அரசு செய்யக்கூடிய கடமையாக இதனை நாங்கள் கருதுகிறோம்.

கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது கல்வி, உடல் நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான  அளவுக்கு மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. 

ஆனால் அதே நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு நான் சொல்ல இருப்பது  மூன்றே மூன்று தான்.  முதலில் படிப்பு, இரண்டாவதும் படிப்பு, மூன்றாவதும் படிப்பு.  உங்களது படிப்பில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும்.

உங்களுக்கு ஆர்வமான தனித்திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  ஒரே ஒரு பட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியைத் தொடருங்கள். குறிப்பாக பெண்கள், பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும்.

பொருளாதார ரீதியாக நீங்கள் சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையை பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது தான், ஏதோ சட்டமன்ற உறுப்பினராக அல்ல, முதலமைச்சராக அல்ல, உங்கள் தந்தையாகவே நின்று இந்த நேரத்தில் நான் உரிமையோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து