முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற மின்துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ் : முதல்வர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திங்கட்கிழமை, 3 அக்டோபர் 2022      இந்தியா
Ragasamy 2022--09-26

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற  மின்துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமியுடன் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

முடிவுக்கு எதிர்ப்பு... 

புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் பழுது நீக்குதல், கட்டணம் வசூல், மின்அளவீடு செய்தல் போன்ற அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

மக்கள் போராட்டம்...

மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி ஏந்திய... 

இதற்கிடேயே செயற்கை மின்வெட்டை ஏற்படுத்திய மின்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து துணை மின் நிலையங்களிலும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

அதிரடி படையினர்...

மின்துறை ஊழியர்களின் வேலை நிறுத்த‌ப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் துண்டிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்கவும், இந்த போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நிலவும் அசாதாரண சூழலை சரி செய்யவும் மத்திய துணை ராணுவப் படையை பாதுகாப்பாக அரக்கோணத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அதில் 120 பேர் கொண்ட (ஒரு கம்பெனி) அதிவிரைவு அதிரடி படையினரும் (RAF) அடக்கம்.

நள்ளிரவில் கைது...

முன்னதாக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறானது என்று கூறிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நள்ளிரவில் விடுவித்தனர்.

அமைச்சரவை கூட்டம்... 

இந்த நிலையில், மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை.... 

இதற்கிடையே, மின்துறை ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க சட்டபேரவைக்கு வந்தனர். இதனால் அமைச்சரவை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மின்துறை ஊழியர்களுடன் முதல்வர் மந்திரி ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம் வாபஸ்...

இந்த பேச்சுவார்த்தையின் போது மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 6-நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து