முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்லோவேனியாவின் முதல் பெண் அதிபர் நடாசா தேர்வு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2022      உலகம்
Natasha 2022-11-15

Source: provided

லியுப்லியானா : ஸ்லோவேனியா நாட்டின் முதல் பெண் அதிபராக நடாசா தேர்வாகியுள்ளார்.

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அன்ஷே லோகார் உள்பட 7 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் யாருக்கும் வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்குகள் கிடைக்காத நிலையில் அன்ஷே லோகார் அதிக வாக்குகளுடன் முதல் இடத்தையும், அவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பளராக களம் இறங்கிய பெண் வக்கீலும், முன்னாள் பத்திரிகையாளருமான நடாசா பிர்க் முசார் 2-வது இடத்தையும் பிடித்தனர். 

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த ஞாயிறன்று 2-வது சுற்று தேர்தல் நடந்தது. முதல் சுற்று தேர்தலில் நடாசா சுயேட்சையாக போட்டியிட்ட நிலையில் 2-வது சுற்று தேர்தலில் அவரை பிரதமர் ராபர்ட் கோலோப்பின் மத்திய இடதுசாரி கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரித்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியானதில்  நடாசா 54 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 

முன்னாள் வெளியுறவு அமைச்சரான அன்ஷே லோகார் 46 சதவீத வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். இதன் மூலம் ஸ்லோவேனியா நாட்டின் முதல் பெண் அதிபராக நடாசா தேர்வாகியுள்ளார். அவர் அடுத்த மாதம் 23-ம்  தேதி அதிபராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 54 வயதான நடாசா அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து