முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை அரசு பறித்து விட்டது: கவர்னரை சந்தித்த பின் இ.பி.எஸ். பேட்டி

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      அரசியல்
EPS 2022 11 23

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை தி.மு.க. அரசு பறித்து விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஸ்வநாதன், முனுசாமி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கவர்னரிடம் புகாரளித்துள்ளேன்.  தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது. உளவுத்துறை முன்கூட்டியே கண்டுபிடித்து இருந்தால் கோவை கார் வெடிப்பை தடுத்து இருக்கலாம். கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை. 

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை காவல்துறை முறையாக விசாரணை செய்யவில்லை. நிர்வாக திறமையின்மை காரணமாக போதைப்பொருளை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை தி.மு.க. அரசு பறித்துவிட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலையில் தி.மு.க. ஆட்சியில் தட்டுப்பாடு உள்ளது. நம்ம ஊரு சூப்பரு என்ற விளம்பர பேனர் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ. 350 செலவாகும் பேனருக்கு ரூ. 7,906 விலை நிர்ணயம் செய்து கணக்கு காட்டுகிறார்கள். தமிழகம் முழுவதும் டெண்டரே விடாமல் சட்டவிரோதமாக மதுபார்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுபான கொள்முதலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. புகார்களை படித்துப் பார்த்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து