முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு : ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் உள்பட 788 பேர் போட்டி

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      இந்தியா
Gujarat election 2022-11-27

Source: provided

அகமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 89 தொகுதிகளில் இன்று முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் முதல் கட்டதேர்தலில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் உள்பட மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

89 தொகுதிகளில்...

குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 89 தொகுதிகளுக்கு இன்று (1-ந்தேதி) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.

மும்முனை போட்டி...

முதல்கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்கள் அடங்கும். இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் தீவிர பிரசாரம் நடைபெற்றது. குஜராத் தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்தனர். 

தீவிர பிரசாரம்...

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

பிரசாரம் ஓய்ந்தது...

ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் பிரசாரம் செய்தனர். நேற்று முன்தினம் முக்கிய தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

788 வேட்பாளர்கள்... 

முதல்கட்ட தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் 89 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய வரவான ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. சூரத் கிழக்கு தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளர் கடைசி நாளில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரதிய பழங்குடியினர் கட்சி 14 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மேலும் 339 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். பா.ஜனதா 9 பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் 6 பெண் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி கட்சி 5 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளன.

முக்கிய வேட்பாளர்கள்...

இன்று நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் கட்வி, கம்பாலியா தொகுதியிலும், முன்னாள் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான பர்சோத்தம் சோலங்கி பாவ்நகர் புறநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். மோர்பி பால விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டு பிரபலமடைந்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. காந்திலால் அம்ருதியா, மோர்பி தொகுதியிலும், பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இட்டாலியா, கதர்காம் தொகுதியிலும் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

மொத்த வாக்காளர்கள்...

குஜராத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 91 லட்சத்து 35 ஆயிரத்து 400 ஆகும். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேர் ஆண்கள். 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 497 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

வாக்குச்சாவடிகள்...

முதல் கட்ட தேர்தலுக்காக 25 ஆயிரத்து 434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34 ஆயிரத்து 324 வாக்குப்பதிவு எந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகள், 38 ஆயிரத்து 749 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 27 ஆயிரத்து 978 தலைமை அதிகாரிகள், 78 ஆயிரத்து 985 வாக்குப்பதிவு அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 288 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு...

குஜராத்தில் முதல்கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுகிறார்கள். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புகளும் போடப்பட்டுள்ளன. குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. வருகிற 8-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து