முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      தமிழகம்
CM-1 2023 01 23

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தோம். தேர்தல் பிரசாரத்துக்கு மு.க.ஸ்டாலின் அவசியம் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவரும் வருவதாக சொன்னார். 

எங்களை பொறுத்தவரை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே 'கை' சின்னத்துக்கு கடந்த 3, 4 நாட்களாக தி.மு.க. அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, காங்கிரஸ் தொண்டர்களும், தி.மு.க. தொண்டர்களும், வாக்கு சேகரித்து பிரசாரம் செய்ததற்கு எங்களது நன்றியை தெரிவித்தோம்.

இனிமேல் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி, முஸ்லீம் லீக் இயக்கத்தை சார்ந்தவர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை சந்திப்பதோடு கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனிடமும் பேசி உள்ளோம். எல்லா கூட்டணி கட்சியை சார்ந்தவர்களையும் நாங்கள் சந்திப்போம்.

எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. ஏனென்றால் தி.மு.க. கூட்டணி என்பது வலுவான கூட்டணி. அதுமட்டுமல்ல தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் காவலாக, இருக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கண்டிப்பாக அவருடைய நல்லாட்சிக்காக இந்த கூட்டணிக்கு 'கை' சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்கள்.

வேட்பாளரை பொறுத்தவரை மாற்றம் ஏன் என்பதை விரிவாக நான் சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. அதனால் கூட்டணி கட்சியை சார்ந்தவர்களும் மற்றவர்களும் விரும்பிய காரணத்தால், குறிப்பாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கேவும் சொல்லிய காரணத்தால் அவர்கள் என் மீது வைத்திருக்கிற நம்பிக்கைக்கு நான் அடிப்பணிய வேண்டும். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் பேரியக்கத்துக்கு தேடித் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து